சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையில் கட்டிலில் படுத்தபடி ஆஜரான வக்கீல்
By: Karunakaran Sun, 21 June 2020 09:57:08 AM
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. கொரோனா பரவல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணை காணொலி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு காணொலி காட்சி அமர்வு ஒன்றில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஆஜரான வக்கீல் ஒருவர் ‘டி-சர்ட்’ அணிந்தவாறு கட்டிலில் சாய்ந்து படுத்து கொண்டு வாதாடினார். இதனால் நீதிபதி எஸ்.ரவீந்திர பட் கடும் ஆத்திரம் அடைந்தார். பின்னர் அவர், கோர்ட்டு நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தார்.
நீதிபதி எஸ்.ரவீந்திர பட் பேசுகையில், நாம் இப்போது மிகவும் கடுமையான காலகட்டத்தை கடந்து வருகிறோம். இந்தநிலையில் காணொலி அமர்வுகள் தவிர்க்க முடியாத அம்சமாகி உள்ளது. இந்த நிலையில் இந்த அமர்வுகளில் ஆஜராகும்போது குறைந்தபட்ச கோர்ட்டு நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என கடும் கண்டனம் தெரிவித்தார்.
அதன்பின் அந்த வக்கீல் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார். அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காணொலி அமர்வில் ஆஜராகும் வக்கீல்கள் அனைவரும் திரையில் சரியான முறையில் உடை, பின்னணியுடன் ஆஜராக வேண்டும் என கருத்து கூறினார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.