வந்தே பாரத் ரயிலில் ஏறி செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற நபருக்கு ஏற்பட்ட வேதனை
By: Nagaraj Thu, 19 Jan 2023 12:39:29 PM
விசாகப்பட்டினம்: வந்தே பாரத் ரயிலில் ஏறி செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற அந்த நபர், 159 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஜயவாடா வரை பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆந்திரா - தெலுங்கானா மாநிலத்தை இணைக்கும் விதமாக விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 15ஆம் தேதி டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
முற்றிலும் இந்தியாவில் தயார் செய்யப்பட்ட இந்த ரயில், விமானத்தில் உள்ளதை போன்று இருக்கைகள் மற்றும் முழு ஏசி வசதி செய்யப்பட்ட தானியங்கி கதவுகளுடன் கூடிய ரயிலாகும்.
இந்த ரயிலில் ஏறி போட்டோ எடுப்பதற்காக கிழக்கு கோதவரி மாவட்டம் ராஜமஹேந்திரபுரத்தில் ஒருவர் ஏறினார். ரயிலில் உள்ள வசதிகளை படம் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரயில் கதவுகள் முடி கொண்டு புறப்பட தயாரானது.
அவர் ரயில் கதவை திறக்க முயன்றார். ஆனால் தானியங்கி கதவுகள் என்பதால் திறக்க முடியவில்லை.
அதே நேரத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகர், அந்த இடத்தில் இருந்த நிலையில், எதற்காக ரயிலில் ஏறினீர்கள் என கேட்டார். அதற்கு புகைப்படம் எடுப்பதற்காக ரயிலில் ஏறினேன், தயவு செய்து கதவை திறக்கச் சொல்லுங்கள் என்றார். டிக்கெட் பரிசோதகர், வந்தே பாரத் ரயிலில் உள்ளவை தானியங்கி கதவுகள். ரயில் புறப்படுவதற்கு முன் அவை மூடிக் கொண்டால் மீண்டும் திறக்க முடியாது. எனவே ரயில் மீண்டும் விஜயவாடாவில் மட்டுமே நிற்கும் என தெரிவித்தார்.
பாவம், வந்தே பாரத் ரயிலில் ஏறி செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற அந்த நபர், 159 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஜயவாடா வரை பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.