மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்
By: Karunakaran Wed, 29 July 2020 2:14:28 PM
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா காலகட்டத்திலும் மக்கள் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 2.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதேபோல், மிசோரமின் சம்பால் பகுதியில் நேற்று இரவு 8.08 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது.
வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்குள்ள மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். மேலும் வட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.