துபாயில் உருவாக்கப்படும் மாதிரி செவ்வாய் கிரக நகரம்
By: Karunakaran Fri, 12 June 2020 3:39:38 PM
வரும் 2117-ஆம் ஆண்டு அமீரகம் சார்பில் செவ்வாய் கிரகத்தில் முதல் நகரம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக துபாய் நகரத்தில் மாதிரி செவ்வாய் கிரக நகரமாக உருவாக்கப்பட உள்ளது. துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் செவ்வாய் கிரக 2117-ன் திட்ட மேலாளர் அட்னன் அல் ரய்ஸ் இதுகுறித்து கூறுகையில், இதில் சர்வதேச அளவில் நடைபெறும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். இது ஒரு 100 ஆண்டு திட்டமாகும். இந்த திட்டத்திற்காக அமீரக அரசு 2 ஆயிரத்து 200 கோடி திர்ஹாம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உலகளவில் முதலாவதாக அமீரகம் சார்பில் செவ்வாய் கிரகத்தில் நகரத்தை உருவாக்குவது இதன் நோக்கமாகும். இதற்கு முன் அமீரகத்தின் சார்பில் இந்த ஆண்டில் வரும் ஜூலை மாதம் ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. இது அடுத்த (2021) ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்து, அங்கு உள்ள தகவலமைப்புகளின் அடிப்படையில் படிப்படியாக நகரத்தை உருவாக்கும் முயற்சி செயல்படுத்தப்படும். செவ்வாய் கிரகத்தில் நகரத்தை அமைக்கும் முன் இங்குள்ள பாலைவனப்பகுதியில் செவ்வாய் கிரகத்தில் அமைய இருக்கும் கட்டிடம் மற்றும் கட்டுமானங்களை அமைத்து சோதனை செய்து பார்க்கும் விதமாக புதிய செவ்வாய் கிரக மாதிரி நகரம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 50 கோடி திர்ஹாம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக துபாயின் புறநகரில் உள்ள பாலைவன பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதன் முதற்கட்ட கட்டிடக்கலை வரைபடம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. அனைத்து நாடுகளில் நடைபெறும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்பம் மற்றும் இட வசதிகளுடன் இந்த மாதிரி நகரம் கட்டப்பட உள்ளது. இங்கு உள்ள கட்டிடங்களில் செவ்வாய் கிரகத்தில் உள்ளது போன்ற சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படும். வரும் நவம்பரில் இதன் திட்ட பணிகள் தொடங்கலாம்.