சிலியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஓவல்லே நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
By: Karunakaran Mon, 07 Sept 2020 3:44:58 PM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இருப்பினும் இந்நிலையிலும் பல பகுதிகளில் உள்ள மக்கள் இயற்கை பேரிடர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிலநடுக்கம், புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஓவல்லே நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 7.16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் கடைகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகவில்லை. ஓவல்லே நகரில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.