பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
By: Karunakaran Mon, 03 Aug 2020 10:34:07 AM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பல பகுதிகளில் மக்கள் இயற்கை பேரிடர்களால் அவதியடைந்து வருகின்றனர். கனமழை, வெள்ளம், நிலச்சரிவு,நிலநடுக்கம் போன்றவற்றால் பல பகுதிகளில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பப்புவா நியூ கினியாநாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லோரெங்காவ் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளி அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நில நடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் லோரெங்காவ் நகரம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல நகரங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வினாடிகளுக்கு மேல் இந்த நிலநடுக்கம் நீடித்தது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் போன்ற கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் கடும் பீதியடைந்து அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகவில்லை.