சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்த ரௌடி திருமணம்
By: Nagaraj Wed, 14 Sept 2022 6:08:00 PM
சென்னை: ரௌடி திருமணத்திற்கு போலீஸ் பாதுகாப்பு... சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரௌடியின் திருமணத்துக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்திருந்தனர்.
குற்றப்பின்னணி கொண்ட ரௌடி நரேஷ் பாபுவின் திருமணம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்து முடிந்துள்ளது. நரேஷ் பாபுவின் திருமணம் நடைபெறவிருந்த திருமண மண்டபம் முழுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: திருமணத்தில் புகுந்து, அவரது எதிரிகள் நரேஷ் பாபுவைக் கொல்ல திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 35 வயதாகும் நரேஷ்பாபு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சோமங்கலம் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவரது திருமணத்தன்று அவரைக் கொல்ல அவரது எதிரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றது. இந்த நிலையில், திருமண மண்டபத்தைச் சுற்றிலும் ஏராளமான காவல்துறையினர், காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.
ரெளடி நரேஷ் பாபுவுக்கும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் நடந்த திருமணத்துக்கு வந்த அனைவரும் காவல்துறை சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். மோசமான அசம்பாவிதம் ஏதேனும் நடக்கக் கூடாது என்பதற்காகவே காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.