தண்ணீருக்காக தவித்து சாலையில் சென்றவரிடம் கெஞ்சும் அணில்
By: Nagaraj Sat, 18 July 2020 12:00:41 PM
அணில் ஒன்று சாலையில் சென்றவரை சுற்றி வந்து முன்னங்கால்களை தூக்கி தண்ணீர் கேட்டு குடிக்கும் வீடியோதான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
தாகத்தில் தவிக்கும் அணில் ஒன்று தண்ணீர் கேட்டுக் கெஞ்சும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது. முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கிக்கொண்டு அணில் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பவரைச் சுற்றிச் சுற்றி வருவது இதயத்தைக் கனக்கச் செய்கிறது.
சாலையில் ஒரு ஆணும், சிறுமியும் நடந்து செல்கிறார்கள். அப்போது, அணில் ஒன்று அவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்து தண்ணீர் பாட்டில் வைத்திருப்பவரைச் சுற்றி சுற்றி வருகிறது. பிறகு, தன் முன்னங்கால்கள் இரண்டையும் மேலே தூக்கி தண்ணீர் பாட்டிலையே பார்த்தபடி சுற்றுகிறது.
சற்று நேரம் அணிலின் செய்கை புரியாமல் நின்ற அந்த மனிதர் அது தண்ணீர் தான்
கேட்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு தண்ணீர் புகட்டுகிறார்.
அணில்
பாட்டிலில் வாய் வைத்து வேண்டுமளவுக்குத் தண்ணீர் குடிக்கிறது. போதுமான
அளவு தண்ணீர் குடித்ததும் அங்கிருந்து நகர்ந்து செல்கிறது அணில். இந்திய
வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா இந்த வீடியோவை ட்விட்டரில், "தண்ணீர்
கேட்கும் அணில்' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த
சினிமா தயாரிப்பாளர், நிலா மாதப் பாண்டே, “இதைப் பார்த்தபோது என் இதயமே
உடைந்துவிட்டது. நல்ல வேளை அதற்குத் தண்ணீர் கிடைத்துவிட்டது. பல
விலங்குகள் இதைப் போன்றுதான் தண்ணீருக்குத் தவிக்கின்றன. மனிதன் விலங்குகள்
பற்றியும் சிந்திக்க வேண்டும்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இதுவரை
ட்விட்டரில் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோரும். ரெட்டிட் தளத்தில்
முப்பது லட்சத்துக்கும் அதிகமானோரும் வீடியோவைப் பார்த்துள்ளனர்.
விலங்குகளுக்காக ஆங்காங்தே தண்ணீர் வைக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ
உணர்த்துவதாக உள்ளது. இந்த வீடியோவைப் பகிரும் நெட்டிசன்கள் உருக்கமாக
கருத்து தெரிவித்து வருகிறார்கள்!