இலங்கை நாடு முழுவதும் இன்று அவசர நிலை பிரகடனம் அமல்
By: vaithegi Wed, 13 July 2022 4:03:19 PM
இலங்கை : கடந்த 7 சகாப்தங்களாக இல்லாத அளவுக்கு இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடிகள் மிக தீவிரமடைந்துள்ளது. இந்நெருக்கடியால் மக்கள் அன்றாட உணவுக்கு வழியில்லாமல் பெரிய அளவில் திண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முதல் பெட்ரோல், டீசல் வரையிலான எரிபொருட்கள் வரைக்கும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் பொது மக்களின் ஒட்டு மொத்த கோபமும் ராஜபக்சே சகோதரர்களின் அரசாங்கம் மீது எதிர்ப்பாக உருவெடுத்துள்ளது.
இதனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் நெருக்கடியாக மாறி இருக்கிறது. இச்சூழலில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தலைநகர் கொழும்புவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து போராட்டக்காரர்கள் கடந்த ஜூலை 10ம் தேதியன்று அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு அங்குள்ள நீச்சல் குளங்கள், படுக்கை அறைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து தங்களது உச்சக்கட்ட கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த சூழ்நிலையில் கோத்தபய ராஜபக்சே இன்று பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பதவி விளக்குவதற்கு முன்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் இருந்து மக்கள் கொழும்பு நகருக்கு படையெடுத்து வருகின்றனர். இப்போது இலங்கையில் போராட்டம் மிக தீவிரமடைந்து வருவதால், நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு தற்போது அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.