வங்கக்கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு ..அதிகனமழைக்கு வாய்ப்பு
By: vaithegi Sun, 26 Nov 2023 3:58:41 PM
சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது. இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும்,
இது பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகிற நவம்பர் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை பொழியலாம் என்றும்அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக, மூட்டத்துடன் காணப்படும் என்றும், மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பொழியலாம் என்றும்அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து நாளை வங்கக்கடல் பகுதிகளில் புயல் சின்னம் உருவாகலாம் என்பதனால் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும்எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.