ஆரம்பக்கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்து மாணவர்களுக்கும் பிரத்யேகமான அடையாள எண்
By: Nagaraj Mon, 16 Oct 2023 11:40:00 AM
புதுடில்லி: பிரத்யேகமான அடையாள எண்... நாட்டில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பிரத்யேகமான அடையாள எண்ணை உருவாக்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் ஒரு பகுதியாக, 12 இலக்க ஆதார் எண்ணுடன் சேர்த்து இந்த அபார் எனப்படும் இந்த எண் உருவாக்கப்படுகிறது. இந்த பிரத்யேக அபார் எண் மூலம், ஒவ்வொரு மாணவரின் கல்வி தொடர்பான அடுத்த கட்ட முன்னேற்றம், விளையாட்டு, தனித்திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றில் அவரது சாதனைகள் அனைத்தும் பதிவு செய்யப்படும்.
இது, அந்த மாணவரது எதிர்கால உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு பெரிதும் பயன்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாணவர்களுக்கு அபார் எண்ணை உருவாக்குவது குறித்த பணிகளைத் தொடங்கும்படி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதே அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 16 முதல் 18-ஆம் தேதி வரை பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து ஆலோசிக்கும்படியும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.