பிரியாணிக்காக விபரீத முடிவு: இளம்பெண் தீ குளித்து தற்கொலை
By: Monisha Sat, 27 June 2020 11:42:21 AM
கணவர் பிரியாணி வாங்கித் தராத காரணத்தால் மனைவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு சௌமியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வீட்டின் உரிமையாளர் மனோகரனிடம் பிரியாணி வாங்கித் தருமாறு கூறி பணம் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து மனோகரனின் மனைவி தனக்கும் பிரியாணி வேண்டும் என்று கூறவே ஊரடங்கு நேரத்தில் வருமானம் இல்லாததால் பிரியாணி வாங்க பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சிறிய அளவில் வாக்குவாதம் நடந்துள்ளது.
இந்த நிலையில் சௌமியா பிரியாணி கேட்டு அடம் பிடித்ததால், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று மணிகண்டன் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சௌமியா பைக்கில் இருந்த பெட்ரோலை பிடித்து மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டார். இதனால் தீயினால் படுகாயமடைந்த சௌமியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
உயிர் போகும் கடைசி நேரத்தில் தன்னை எப்படியும் கணவர் தடுத்து விடுவார் என்ற என்ற நம்பிக்கையில் அவசரப்பட்டு விபரீத முடிவை எடுத்து விட்டதாகவும் தற்போது கணவரையும் குழந்தைகளையும் விட்டு செல்வது எனக்கு வேதனையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார். பிரியாணிக்காக விபரீத முடிவை எடுத்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.