பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழ்ந்து வரும் வாலிபர்
By: Karunakaran Fri, 18 Sept 2020 5:59:19 PM
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்த லெட்சுமாங்குடி மேலத்தெருவை சேர்ந்த கண்ணன் என்ற கூலித்தொழிலாளி மனைவி தங்கச்செல்வி ஆவார். தங்கச்செல்வி, மஞ்சள் காமாலை நோயால் இறந்து விட்டார். இவருக்கு 19 வயதில் கலையரசன் என்ற மகன் உள்ளார். கலையரசன் இவர்களது குடும்பத்தில் பிறந்த விதம்தான் அந்த பகுதியில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கலையரசன் பிறக்கும்போதே மூக்கு மற்றும் உதடு பகுதி மூடியபடியே காயத்துடன் பிறந்துள்ளான்.
கலையரசன் தாய்ப்பால் கூட மிகவும் சிரமத்துடன் தான் குடித்து வளர்ந்துள்ளான். இதனால் ஒரளவு வளர்ந்த பிறகும் கூட அவனால் பேசக்கூட முடியவில்லை. இந்த நிலையில் மனைவியும் இறந்து விட்டதால் மிகுந்த சிரமத்துக்கிடையே பல்வேறு சோதனைகள் தாங்கிக்கொண்டு கண்ணன் தனது மகன் கலையரசனை வளர்த்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மூக்கு மற்றும் உதடு மூடியதை சரி செய்வதற்கு கலையரசனுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் கலையரசன் மெல்ல, மெல்ல பேச ஆரம்பித்து உள்ளான்.
கலையரசன் பிறந்ததில் இருந்து இதுவரையில் சாப்பாடு, இட்லி, தோசை போன்ற உணவுகளை சாப்பிட்டதே கிடையாது. ஏனென்றால் அவனது உள்நாக்கு மூடிவிட்டது. இதனால் கலையரசனால் எந்த உணவும் உட்கொள்ள முடியாது. அதனால் கலையரசன் பிறந்ததில் இருந்து இன்று வரை பவுடர் பால் மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறான். நாள் ஒன்றுக்கு 6 முறை பவுடர் பால் மட்டுமே குடித்து உயிர் வாழும் அதிசய பிறவியாக கலையரசன் இருப்பதை கண்டு பலரும் வியந்து போகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட பால் பவுடர் பாலைத்தவிர மாட்டுப்பாலோ, தனியார் நிறுவனங்களின் பாக்கெட் பாலோ கொடுத்தால் கலையரசன் அதனை குடிப்பதில்லை. இதனால் கலையரசனின் எதிர்காலம் குறித்து அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையுடன் உள்ளனர். கூலித்தொழிலாளியான கண்ணன் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் தனது மகன் கலையரசனுக்கு பால் பவுடர் வாங்கி கொடுத்து வருகிறார். ஒரு பாக்கெட் 2 நாள் மட்டுமே வருவதாகவும், பால் பாக்கெட் வாங்குவதற்கே ஒரு தொகை செலவாவதாகவும் கலையரசனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் தனது மகன் கலையரசனின் எதிர்காலத்திற்கு அரசு உதவிடவும், தாங்கள் வசிக்கும் சின்ன குடிசை வீட்டுக்கு பதிலாக அரசு சார்பில் இலவச வீடு கட்டித்தர வேண்டும் என கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.