பல துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்த நிலையிலும் உயிர் தப்பிய இளைஞர்
By: Nagaraj Mon, 13 June 2022 08:46:53 AM
ராஞ்சி: ராஞ்சியில் நடந்த போராட்டத்தின் போது பல துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையிலும் இளைஞர் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தொலைகாட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும்போது இஸ்லாமிய மத நம்பிக்கையின் முக்கிய பாத்திரமான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைத்தார்.
அதைத் தொடர்ந்து மற்றொரு பாஜக நிர்வாகியான அனுல் ஜிண்டால் தனது டுவிட்டர் பக்கத்தில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டார். இவர்களது கருத்துகள் மிகவும் குறுகிய நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் கவனத்தை சென்றடைந்தது. இதனால் இந்தியா மட்டும் இல்லாமல், துபாய், சவுதி, கதார் போன்ற வளைகுடா பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து, நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மேற்குறிப்பிட்ட இருவர் மீதும் வழக்குகள் பதியப்பட்டது. மேலும், கட்சி ரீதியாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தின்போது பல நகரங்களில் கலவரங்கள் மூண்டன.
இந்த வகையில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின்போதும்
பெரும் கலவரம் வெடித்தது. ஒரு சமையத்தில் போராட்டக்காரர்கள் அங்கிருக்கும்
கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் தடுக்க
வந்த போலீஸார் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டன.
அப்படி
கலவரத்தின்போது கடைக்கு சென்றிருந்த அப்சார் (24) என்ற இளைஞர் மீது
சரமாரியாக துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில்
மயங்கி விழுந்தார். உடனடியாக கிடைத்த மருத்துவ உதவியால் அவர்
உயிர்காப்பாற்றப்பெற்றார். மேலும், அவரை சோதித்ததில் அவரது வயிற்றுப் பகுதி
மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் 6 துப்பாக்கிக் குண்டுகள்
பாய்ந்திருந்தது தெரியவந்தது.
அவர் உயிர் பிழைப்பது கடினம் என
முதலில் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், பின்னர் நடத்தப்பட்ட தீவிர
சிகிச்சையில் அவரது உடலில் இருந்து 4 குண்டுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன,
இரு குண்டுகள் இன்னும் உடலில் இருப்பதாக தெரிகிறது. அப்சார் குணமடைந்து
வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் அவரது உடலில் 2 குண்டுகள்
இருப்பதாகவும், சில நாட்கள் கழித்து அவை அகற்றப்படும் எனவும்
மருத்துவர்கள் கூறினர். 6 குண்டுகள் பாய்ந்தும் இளைஞர் உயிர் பிழைத்தது
உண்மையில் மருத்துவ வரலாற்றில் வியக்கத்தக்க நிகழ்வு என மருத்துவர்கள்
தெரிவிக்கின்றனர்