சைக்கிள்களில் சிவப்பு விளக்கை பொருத்தி கவனம் ஈர்க்கும் இளம் பெண்
By: Nagaraj Thu, 23 Mar 2023 11:01:32 AM
லக்னௌ: மக்கள் கவனத்தை ஈர்க்கும் இளம்பெண்... லக்னெளவை சேர்ந்த குஷி பாண்டே என்ற பெண் விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் சைக்கிள்களில் சிவப்பு விளக்குகளை ஆர்வத்துடன் பொருத்தி மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். இது தொடர்பான வீடியோவை ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவனீஷ் சரண் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
குஷி பாண்டே லக்னெளவைச் சேர்ந்த 22 வயது பெண். ஒரு சாலை விபத்தில் இவர் தாய் வழி தாத்தாவை இழந்தார். அவளுடைய தாத்தா சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கார் மோதி இறந்தார். சைக்கிளில் சிவப்பு விளக்கு இல்லாததால் வருவது தெரியாமல் கார் இவர் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் தாத்தாவை இழந்த குஷி, இனி சைக்கிளில் செல்பவர்கள் சாலை விபத்தில் சிக்காமல் இருக்க சைக்கிளில் பாதுகாப்பாக சிவப்பு விளக்குளை பொருத்தும் செயலில் இறங்கினார். இதுவரை 1,500 சைக்கிள்களில் சிவப்பு விளக்குகளை பொருத்தியுள்ளார்.
சாலைகளில் முக்கிய சந்திப்பில் நின்று கொண்டு, “சைக்கிளில் சிவப்பு விளக்குகளை பொருத்திக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று ஒரு அட்டையை காண்பிக்கிறார். மேலும் அந்த வழியாக வரும் சைக்கிள்களை நிறுத்தி அவற்றில் சிவப்பு விளக்குகளை இலவசமாக பொருத்துகிறார்.
இந்த வீடியோவை வெளியிட்ட அவினீஷ் சரண், விடியோவின் அடியில் “கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரில் வெளியிடப்பட்ட இந்த விடியோ பலரின் மனதையும் வென்றுள்ளது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பலரும் குஷி பாண்டேயின் முயற்சியை பாராட்டியுள்ளனர்.