அசாமில் பெய்து வரும் கனமழையால் சுமார் 9 லட்சம் பேர் பாதிப்பு
By: Karunakaran Mon, 29 June 2020 09:29:02 AM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை உத்தர பிரதேசம், பீகாரில் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு கடந்த ஓரிரு தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.கனமழை காரணமாக, அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தற்போது அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி 2 பேர் பலியாகியுள்ளதால் அங்கு மழை காரணமாக பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 23 மாவட்டங்களில் உள்ள 9.3 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்துள்ளனர். பேரிடர் மீட்புக்குழுவினர் அங்குள்ள மக்களை மீட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.