- வீடு›
- செய்திகள்›
- 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் மதிப்பெண் விவகாரம் ..ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் மதிப்பெண் விவகாரம் ..ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
By: vaithegi Wed, 20 July 2022 5:19:44 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்று முடிவடைந்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் மறுகூட்டல் அல்லது துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இப்போது மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து விடைத்தாள் நகல்களை பெற்ற மாணவர்கள், விடைத்தாள்களில் உள்ள விடைகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் அதை ஒட்டு மொத்தமாக கூட்டி வழங்கப்பட்ட மதிப்பெண்களை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் இந்த விவகாரம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், பின்னர் இது தேர்வுத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அம்மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்கள், அதனை மேற்பார்வை செய்த அலுவலர்கள் உட்பட 80 பேருக்கு விசாரணை நடத்த தேர்வுத்துறை முடிவு செய்தது. அதன்படி, தேர்வுத்துறையின் எச்சரிப்புக்கு பிறகு 50 ஆசிரியர்கள் இன்று (ஜூலை 20) தேர்வுத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு ஆஜரானார்கள்.
இதை அடுத்து, மாணவர்களின் தேர்வு முடிவுகளில் இப்படி கவனக்குறைவாக நடந்தது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இனி வரும் காலங்களில் இது போன்ற அலட்சியமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அந்த ஆசிரியர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதித் தர வேண்டும் என தேர்வுத் துறையின் துணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இதே போல இந்த விவகாரத்தில் சிக்கிய மற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு ஆஜராவார்கள் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.