கர்நாடகத்தில் இன்று முகக்கவச தினம் அனுசரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு
By: Karunakaran Thu, 18 June 2020 11:58:36 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதுவரை கொரோனாவுக்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முககவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவை பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் இன்று முகக்கவச தினம் அனுசரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், கர்நாடக அரசு 18-ந் தேதி முகக்கவச தினமாக அறிவித்து, அதை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது. மாவட்ட, தாலுகா அளவிலும் முக்கிய பிரமுகர்களை அழைத்து பாதயாத்திரை நடத்தி முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து மாவட்ட, தாலுகா, நகராட்சி, கிராம பஞ்சாயத்து அளவில் அதிகாரிகள் முகக்கவச பாதயாத்திரையை இன்று மேற்கொள்ள வேண்டும். பாதயாத்திரையில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த பாதயாத்திரை மேற்கொள்ளும் போது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது, சானிடைசர் திரவத்தை பயன்படுத்தி கைகளை தூய்மைப்படுத்துவது, முகக்கவசம் அணிவது போன்ற படங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி செல்ல வேண்டும் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.