புதிய கூட்டணியை உருவாக்க நடவடிக்கை; எம்.பி., குமார வெல்கம தகவல்
By: Nagaraj Sat, 10 Sept 2022 2:40:51 PM
கொழும்பு: புதிய கூட்டணி உருவாக்க நடவடிக்கை... எதிர்காலத்தில் விமல், டலஸ் மற்றும் மொட்டு கட்சியின் உறுப்பினர்களை இணைத்துப் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக புதிய இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் தமது மகன் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதுடன், தாம் பதுளையில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றத்தை கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து, பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்த போதிலும், அமைச்சு பதவிகளை ஏற்க போவதில்லை.
அமைச்சரவையில் மோசடியாளர்களில் பலர் பதவிகளை ஏற்றுள்ள நிலையில், அவர்களுடன் அமைச்சரவையில் அங்கம் வகிக்க போவதில்லை என புதிய இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.