ஆந்திர சட்டசபையில் நடிகர் பாலகிருஷ்ணா அதிரடி அட்ராசிட்டி
By: Nagaraj Thu, 21 Sept 2023 11:00:07 PM
ஆந்திரா: ஆந்திர சட்டசபையில் நடிகர் பாலகிருஷ்ணா எழுந்து தொடையை தட்டி மீசையை முறுக்கி ஆவேசமாக பேசினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் ஐடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர சட்டசபை இன்று கூடியது. சட்டசபைக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை அருகே சென்று சபாநாயகர் மீது காகிதம் மற்றும் குடிநீர் பாட்டில்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரபல நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் இந்துபுரம் எம்.எல்.ஏ.வுமான நடிகர் பாலகிருஷ்ணா எழுந்து தொடையை தட்டி மீசையை முறுக்கி ஆவேசமாக பேசினார்.
சந்திரபாபு நாயுடுவை ஆதாரம் இல்லாமல் கைது செய்கிறீர்கள். இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டசபைக்கு வந்து பேசினார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நீர்வளத்துறை அமைச்சர் அம்பாதி ராம் பாபு எழுந்து, இதுபோன்ற செயல்களை சினிமாவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
சட்டசபையில் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்றார். இதற்கு நடிகர் பாலகிருஷ்ணா, “உனக்கு தில் இருந்தால் இந்தப் பக்கம் வா” என்று ஆவேசமாக கத்தினார்.
அதற்கு அம்பதி ராம்பாபு உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இந்தப் பக்கம் வாருங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.