அ.தி.மு.க. அலுவலக சாவி விவகாரம் .. ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
By: vaithegi Mon, 12 Sept 2022 4:43:43 PM
சென்னை : ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ... அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட கடும் மோதல் கலவரமாக மாறியது. இதில் பலர் காயம் அடைந்த நிலையில் அ.தி.மு.க. அலுவலகமும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன.
மேலும் அங்கிருந்த பொருட்களும் கொள்ளை போனது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
இதனையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 20-ந் தேதி நடைபெற்றது. நீதிபதி சதீஷ்குமார் விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதன்படி அ.தி.மு.க. அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிடமே உள்ளது.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீசெல்வம் எவ்வாறு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிமை கோர முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை தவறு என கூற இயலாது என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.