அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
By: vaithegi Mon, 12 Sept 2022 09:58:50 AM
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை .... அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட கடும் மோதல் கலவரமாக மாறியது. இதையடுத்து இதில் பலர் காயம் அடைந்த நிலையில் அ.தி.மு.க. அலுவலகமும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. அங்கிருந்த பொருட்களும் பல கொள்ளை போனது.
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 20-ந் தேதி நடைபெற்றது. நீதிபதி சதீஷ்குமார் விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
எனவே இதன்படி அ.தி.மு.க. அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிடமே உள்ளது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 4-ந்தேதி இது தொடர்பான மனுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என வாதிடப்பட்டது.
மேலும் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்கவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து விட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை அடுத்து இந்த நிலையில் 3 வார இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் இன்று நடைபெறுகிறது. இன்று அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.