சமூகத் தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்பட மக்களுக்கு அறிவுறுத்தல்
By: Nagaraj Mon, 05 Oct 2020 1:05:44 PM
விழிப்பாக செயற்பட வேண்டும்... யாழ். மாவட்ட மக்கள் சமூகத் தொற்றுத் தொடர்பில் விழிப்பாகச் செயற்பட வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவசர அறிவிப்பு விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட மக்களுக்கு அவர் விடுத்துள்ள அவசர செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட, திவிலபிட்டிய பகுதிகளில் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கு கொரோனாத் தொற்று இனம் காணப்பட்டதையடுத்து நாடு பூராகவும் சுகாதார அமைச்சு கொரோனாத் தடுப்புச் செயலணியினால் கொரோனாத் தொற்றினைத் தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்டப் பொதுமக்கள் அவதானமாகச் செயற்பட்டுத் தங்களைத் தாங்களாகவே பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
அதனடிப்படையில் யாழ். மாவட்ட மக்கள் அநாவசியமற்ற நடமாட்டங்களை தவித்து
வீடுகளில் இருப்பதோடு வீதிகளில் பயணிக்கும் போது மாஸ்க் அணிந்து மற்றும்
சமூக இடைவெளியினைப் பேணுவதன் மூலம் பொதுமக்கள் கொரோனாத் தொற்றிலிருந்து
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சமூகத் தொற்று எந்த உருவில்
எங்கே? எப்போது தொற்றும்? என யாருக்கும் தெரியாது. எனவே, கொரோனாத்
தொற்றிலிருந்து யாழ்.மாவட்ட மக்கள் தங்களைப் பாதுகாப்பதற்குச் சுகாதார
நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
மேலும் யாழ்ப்பாணம்
புங்குடுதீவுப் பகுதியில் மினுவாங்கொட பகுதியில் இருந்து வருகை தந்தோர்
தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் கொரோனாத்
தொற்று ஏற்படாவண்ணம் தங்களைச் சமூகத் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு உரிய
முன்னேற்பாடுகளைப் பொதுமக்கள் தாங்களாகவே முன்னெடுக்க வேண்டும். பொது
இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க
வேண்டும்.
மேலும், அலுவலகங்கள் வழமை போல் செயற்படும். எனினும்,
பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் சுகாதார
நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தங்களைச் சமூகத் தொற்றிலிருந்து
பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ் விடயங்களை யாழ்.மாவட்ட மக்கள் அனைவரும்
கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.