சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க நாளை அதிமுக செயற்குழு கூடுகிறது
By: Nagaraj Sun, 27 Sept 2020 11:02:44 AM
நாளை செயற்குழு கூட்டம்... தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. இப்போதே தேர்தல் பணியை தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக செயற்குழு நாளை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டியுள்ளது. காலை 9.45 மணிக்கு செயற்குழு தொடங்குகிறது. தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளடக்கிய செயற்குழுவில் சுமார் 250 பேர் பங்கேற்க உள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் முறைப்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடிய உயர்மட்ட கூட்டத்தில் சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், முதல்-அமைச்சர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக விவாதம் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக இந்த கூட்டத்திலும் நிர்வாகிகள் தங்களின் கருத்துகளை
தெரிவிக்க இருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது.
செயற்குழு கூட்டத்தை
தொடர்ந்து, பொதுக்குழு நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் செயற்குழுவில் நிறைவேற்றப்படும்
தீர்மானத்திற்கு பொதுக்குழுவில் தான் ஒப்புதல் வழங்கப்பட்டு, நடைமுறைக்கு
கொண்டு வரப்படும்.
மேலும் செயற்குழுவில், கட்சியின்
வளர்ச்சிப்பணிகள், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி உள்பட பல்வேறு விஷயங்கள்
குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.