ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அதிமுக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியீடு
By: vaithegi Mon, 27 Nov 2023 3:47:53 PM
சென்னை: அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016. காலத்தால் அழியாத புரட்சிகரமான பல திட்டங்களால் தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாது, தமிழ் நாட்டு மக்களுக்காக தன் அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்துப் பாடுபட்ட நம் அன்பு அம்மா அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு கழகத்தினரின் இன்றியமையாத கடமையாகும்.
அந்த வகையில், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளானவருகிற 5.12.2023 செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தவுள்ளனர்.
அதனையடுத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சிகளில்,கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு, நம் இதய தெய்வம் அம்மா அவர்களுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவு நாளான 5.12.2023 அன்று, புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில், அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும். அதேபோன்று, கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 5.12.2023 அன்று ஆங்காங்கே புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய திருஉருவப் படங்களை வைத்து, மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது." என அதில் குறிப்பிட்டுள்ளார்.