ஆந்திராவில் இன்று விமான சேவை தொடங்கியது!
By: Monisha Tue, 26 May 2020 12:35:33 PM
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை 2 மாதங்களுக்கு பிறகு நேற்று தொடங்கியது. அனால் ஆந்திர மாநிலத்தில் நேற்று விமான சேவையை தொடங்கவில்லை.
மற்ற மாநிலங்களில் இருந்து நேற்று மொத்தம் 532 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் 39,231 பேர் பயணித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஆந்திராவில் இன்று விமான சேவை தொடங்கியது. விமான பயணங்களுக்கு முன்பதிவு செய்த பயணிகள், விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னரே விமான நிலையம் வந்து சேர்ந்தனர். பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் லக்கேஜ்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு பிறகே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். விமான சேவை மீண்டும் தொடங்கியதால், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்துள்ள பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.