உடல்நிலை சரியில்லாததால் ஓய்வெடுத்ததாக அஜித் பவார் தகவல்
By: Nagaraj Mon, 10 Apr 2023 10:52:36 AM
மும்பை: மாயமானதாக தகவல் பரவிய நிலையில், உடல் நலம் சரியில்லாததால் வீட்டில் ஓய்வு எடுத்தேன் என அஜித்பவார் தெரிவித்து உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் நேற்று மாலை திடீரென காணாமல் போனதாக தகவல் பரவியது. அவர் திடீரென அரசு வாகனம் மற்றும் ஊழியர்களை விட்டுவிட்டு தனியார் வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீட்டில் ஓய்வெடுத்த அஜித் பவார் தனது மனைவியுடன் பிம்ப்ரி சிங்வாட்டில் உள்ள நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது திடீரென மாயமானதாக வெளியான தகவல் குறித்து அஜித் பவார் கூறியதாவது:-
எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. எனவே நேற்றைய எனது பயணங்கள், நிகழ்ச்சிகளை ரத்து செய்தேன். கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்தேன். போதிய ஓய்வு கிடைக்கவில்லை. சரியான தூக்கம் இல்லாமல் இருந்தேன்.
எனவே மருந்து எடுத்து கொண்டு வீட்டில் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். எனவே ஓய்வு எடுத்தேன். நானும் மனிதன் தான். எனக்கும் உடல்நலம் பாதிக்கப்படும். இதுபோன்ற நேரங்களில் யூகங்களில் அடிப்படையில் செயல்படாமல் தகவலை உறுதி செய்து செய்தி வெளியிட வேண்டும். நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் தான். ஆனால் இதுபோன்று களங்கப்படுத்துவது தவறாகும். இவ்வாறு அவர் கூறினார்.