சீனாவுக்கு எதிராக பொருளாதார ரீதியிலும் பதிலடி கொடுக்க வேண்டும் - அகிலேஷ் யாதவ்
By: Karunakaran Thu, 18 June 2020 11:57:59 AM
சமீபத்தில் லடாக் எல்லையில் சீன ராணுவதினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்தனர். இருப்பினும் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவி இந்திய ராணுவத்தை தாக்கியது.
லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்பட பல கட்சியினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சீனாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், நாட்டின் நலனுக்கான எந்த ஒரு முடிவிலும் மத்திய அரசுடன் சமாஜ்வாடி கட்சி துணை நிற்கும். சீனாவின் வன்முறை செயலுக்கு இந்தியா ராணுவ ரீதியில் மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், சீன நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனைத்து ஒப்பந்தங்களும் உடனடியாக இடை நிறுத்தப்படவேண்டும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பாகிஸ்தான்,சீனா,நேபாளம் நாடுகள் இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.