கொரோனா சிகிச்சையை கண்காணிக்க அனைத்துக்கட்சி குழு அமைக்க வேண்டும் - சித்தராமையா
By: Karunakaran Wed, 01 July 2020 09:59:28 AM
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அங்கு கொரோனா பாதித்தோரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது, சிகிச்சை அளிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் வருகின்றன. இதனால் கொரோனா சிகிச்சையை கண்காணிக்க அனைத்துக்கட்சி குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க அனைத்துக்கட்சி குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க இது அவசியம் தேவை. கொரோனா நிர்வாக பணிகளில் ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன என்று பதிவிட்டுள்ளார்.
சிலர் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி உயிரை காப்பாற்றிக் கொள்வதும், ஏழைகள் திசை தெரியாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் பொதுமக்களின் நலனை காப்பதில் எதிர்க்கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கொரோனா நோயாளிகள் ஏற்கனவே மனம் வெறுத்துப்போய் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் அரசு அலட்சியம் காட்டினால், அவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடுவார்கள். அதனால் முதல்-மந்திரி எடியூரப்பா, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.