- வீடு›
- செய்திகள்›
- இலங்கையில் டாக்டர் ஜெய்சங்கர் ,நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
இலங்கையில் டாக்டர் ஜெய்சங்கர் ,நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
By: vaithegi Tue, 19 July 2022 09:32:04 AM
புதுடெல்லி: இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.
மேலும் சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், இலங்கைக்கு இந்தியா ஆதரவுகரம் நீட்டியுள்ளது. கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள், உரம் போன்றவற்றை தீவு நாடான இலங்கைக்கு கப்பலில் அனுப்பி வருகிறது. எனினும், இலங்கையில் நெருக்கடியான சூழல் நீடித்து வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் அவசரநிலையை பிறப்பிப்பதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் நேற்று காலை வெளியிட்டார். இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டு வருகின்றன. இதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறுகிறது. இச்சூழலில், இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழல் பற்றிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு இன்று அழைப்பு விடுத்து உள்ளது.
இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மத்திய வெளிவிவகார மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இலங்கை பற்றி விரிவாக பேசப்படும். இதை மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.
மேலும் கடந்த ஞாயிறு அன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் இலங்கை நெருக்கடி சூழல் பற்றியும், அந்நாட்டில் இருந்து பலர் அகதிகளாக வெளியேறி தமிழகத்திற்கு வருவது பற்றியும் வருத்தம் தெரிவித்ததுடன், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு அண்டை நாடான இலங்கையில் தீர்வு ஏற்பட உதவிடும்படி வலியுறுத்தினர். இதை முன்னிட்டு அரசு சார்பில் தன்னிச்சையாக முன்வந்து இன்று இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.