பிரேசில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் - ஜெயிர் போல்சனாரோ
By: Karunakaran Wed, 09 Dec 2020 09:25:46 AM
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்காவும், இந்தியாவும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு இதுவரை 66 லட்சத்து 28 ஆயிரத்து 65 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் 1 லட்சத்து 77 ஆயிரத்து 388 பேர் உயிரிழந்துள்ளனர்.
ந்நிலையில் உரிய ஒப்புதல் கிடைத்தவுடன் பிரேசில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனாரோ அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயிர் போல்சனாரோ தனது டுவிட்டர் பக்கத்தில், அறிவியல் பூர்வமான வழிகாட்டுதல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வெளிவந்த பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதால், அந்த தடுப்பூசியை வாங்க பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றன. இதனால் உலகம் முழுவதும் கூடிய விரைவில் கொரோனா தடுப்பு மருந்து அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.