ஊரடங்கு காரணமாக பெங்களூருவை தொடர்பு கொள்ளும் அனைத்து சாலைகளும் மூடல்
By: Karunakaran Wed, 15 July 2020 12:32:32 PM
பெங்களூருவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 56 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதையடுத்து, பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகரில் 14-ந் தேதி இரவு 8 மணி முதல் ஒரு வாரம் காலம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து பிற மாவட்டங்களில் இருந்து பெங்களூருவை தொடர்புகொள்ளும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து வரும் சாலை, அத்திப்பள்ளியில் மூடப்பட்டுள்ளது. பெங்களூருவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் இரும்பு தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன.
பெங்களூருவில் பொதுமக்களின் நடமாட்டத்தை தடுக்க நகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில், பெங்களூரு நகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் கொரோனாவை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்று (நேற்று) இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்துவிட்டது. வருகிற 22-ந் தேதி காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. பொதுமக்கள் பயப்படாமல், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.