இலங்கையில் கொரோனா பாதிப்பினால் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளும் திறப்பு
By: Karunakaran Tue, 11 Aug 2020 10:36:12 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிப்படைந்தது.
இலங்கையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின் கொரோனா தாக்கம் சற்று குறைந்ததால், கடந்த ஜூலை மாதம், குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரித்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் இலங்கையில் அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன.
இதுகுறித்து இலங்கை கல்வித்துறை செயலாளர் சித்ரானந்தா கூறுகையில், 200 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றி, முன்புபோல் இயங்கலாம். 200 மாணவர்களுக்கு மேற்பட்ட பள்ளிகள், சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம் என்பதால், எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்த தேதிகளில் வகுப்புக்கு வரலாம் என்று முடிவெடுத்து செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இருப்பினும் பள்ளி உணவகம் திறக்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளார். இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 844 ஆகவும், பலி எண்ணிக்கை 11 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.