அனைவரும் வீடுகளில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரிக்க வேண்டும் - பிரதமர் மோடி அழைப்பு
By: Karunakaran Fri, 19 June 2020 09:12:08 AM
கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று, ஐ.நா. ஜூன் 21ந் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இந்நிலையில், 6 வது சர்வதேச யோகா தினம் வருகிற 21ந் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. சர்வதேச யோகா தினத்தன்று டெல்லியில் இருந்தபடியே பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
தற்போது, உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலே முடங்கியுள்ளனர். இந்நிலையில் ஜூன் 21ந் தேதி சர்வதேச யோகா தினத்தன்று, மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தொற்றுநோயால் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம், ஆனால் நமது உற்சாகம் அல்ல. இந்த ஆண்டு யோகா தினத்தை வீடுகளிலிருந்து அனுசரிப்போம். குடும்பத்தினருடன் சேர்ந்து யோகா செய்வோம் என்று கூறியுள்ளார். அதன்படி, மக்கள் வீட்டிலே இருந்தவாறு யோகா தினத்தை அனுசரிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாலும், கொரோனா பரிசோதனை அதிகரித்துள்ளதாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.