மாணவர்கள் அனைவரும் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும் .. பள்ளிக்கல்வித்துறை
By: vaithegi Thu, 11 Aug 2022 8:31:40 PM
சென்னை: தமிழகத்தில் போதைப் பொருட்கள் நுழையாமல் தடுக்க பல நடவடிக்கைகளை அரசு மிக தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் அவ்வப்போது பள்ளிகளில் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது உயர்ந்து கொண்டே வருகிறது. இதைத் தவிர்ப்பதற்காக அரசு இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
அந்த வகையில் தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தமிழகத்தில் விற்பனை மற்றும் பதுக்கல்கள் உள்ளிட்டவற்றை தடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
அதன் படி இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் (ஆகஸ்ட் 12) நாளை முதல் 19ம் தேதி வரை போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் என அனைத்து பள்ளிகளிலும் காலை 10.30 மணிக்கு மாணவர்கள் அனைவரும் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதை நாளை முதல் 19ம் தேதி வரை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு பள்ளித்தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு குறும்படத்தை அனைத்து மாணவர்களுக்கும் காட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.