டெல்லியில் மூத்த டாக்டர்கள் அனைவரும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
By: Karunakaran Wed, 28 Oct 2020 1:01:27 PM
டெல்லியில் மாநகராட்சி மூத்த டாக்டர்கள் அனைவரும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். டெல்லி மாநகராட்சி நடத்தும் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு கடந்த 3 நாட்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி மூத்த டாக்டர்கள் நேற்று முன்தினம் கூண்டோடு சாதாரண விடுப்பில் சென்றனர்.
இதனால் அங்குள்ள நோயாளிகள் கடும் அவதியுற்றனர். இருப்பினும் அவர்களது சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் மூத்த டாக்டர்கள் அனைவரும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மாநகராட்சி (வடக்கு) ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட மூத்த டாக்டர்கள் இந்த வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் கூட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தனர்.
இதனால் மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் அனைவரும் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடும் மாநிலங்களில் டெல்லியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனா நோயாளிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.