5-ம் கட்ட ஊரடங்கில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட வாய்ப்பு
By: Monisha Sat, 30 May 2020 3:11:04 PM
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள 4-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் 5-ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது மாநில முதல்வர்கள் அளித்த தகவல்களை பிரதமருடன் விவாதித்தார். தற்போது 5-ம் கட்ட ஊரடங்கில் ஏற்படும் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதில், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் மால்கள், உணவு விடுதிகளுக்கு ஏற்கெனவே இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிகிறது. நகரங்களில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் வழியாக மெட்ரோ ரயில்கள் செல்வதால் மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிகிறது.
மும்பை, சென்னை, டெல்லி, அகமதாபாத், தானே, புனே, ஹைதராபாத், கொல்கத்தா, இந்தூர், ஜெய்பூர், ஜோத்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 13 மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மேலும் கறாரான ஊரடங்கு நடைமுறைகள் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும், எந்த நிலையிலும் அதை தளர்த்துவது கூடாது என்று அறிவுறுத்தப்படும். பள்ளிகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளே நீடிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.