சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள பள்ளிக்கு செல்ல மாணவர்களுக்கு அனுமதி
By: Nagaraj Thu, 24 Sept 2020 9:05:24 PM
மாணவர்களுக்கு அனுமதி... 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ள, அக்.,1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: 4ம் கட்ட ஊரடங்கு தளர்வின் போது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே, செப்.21ம் தேதி முதல், ஆன்லைன் வகுப்புகளுக்கும், அதுசார்ந்த பணிகளுக்காகவும் 50 சதவீத ஆசிரியர்களை அழைத்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.
மேலும், கடந்த 8ல் பள்ளிகளை திறக்க சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள், விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.
இதனால், அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 10 முதல் 12ம் வகுப்பு
படிக்கும் மாணவர்கள், தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு
சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ள அனுமதி வழங்கலாம் எனவும்,
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட
வகுப்பு ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்து மாணவர்களின்
சந்தேகங்கள் தீர்ப்பதுடன், ஆலோசனைகளை வழங்கலாம் என பள்ளிகல்வித்துறை
பரிந்துரை செய்துள்ளது.
இதனை ஏற்று, வரும் 1ம் தேதி முதல், 10 முதல்
12ம் வகுப்பு மாணவர்கள், பள்ளிக்கு செல்ல அனுமதி வழங்கி அரசு
உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில்
பள்ளிக்கு வரவழைக்கலாம். ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு ஒரு
முறை பள்ளிக்கு வரலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.