ஆந்திராவில் வரும் 15-ம் தேதிக்கு பின் படப்பிடிப்பு நடத்த அனுமதி
By: Monisha Wed, 10 June 2020 2:47:31 PM
அமராவதியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேற்று நடிகர் சிரஞ்சீவி தலைமையில் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுன், இயக்குநர் ராஜமவுளி, தயாரிப்பாளர்கள் சி. கல்யாண், தில்ராஜு உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
தெலுங்கு திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கொரோனா வைரஸ் தொற்று பரவல் பிரச்சினையால் ஏற்படும் இழப்பு குறித்து முதல்வருடன் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பின்னர் நடிகர் சிரஞ்சீவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தெலங்கானாவில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் வரும் 15-ம் தேதிக்கு பிறகு ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.
தெலுங்கு திரைத்துறை வளர்ச்சிக்கு விசாகப்பட்டினத்தில் 300 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஸ்டூடியோக்கள் கட்டப்படும். படப்பிடிப்புகள் நடத்தப்படும். ஆந்திர அரசின் நந்தி விருதுகள் வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என முதல்வர் உறுதி அளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.