100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் வேலை செய்யும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்
By: Karunakaran Tue, 28 July 2020 11:57:17 AM
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் கிடைத்த வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ள நிலையில், அவர்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், உத்தரகாண்ட் வீல்சேல் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஜேந்திர சிங் தாமியின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வாழ்வாதாரத்திற்காக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் வேலை செய்து வருகிறார்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளியான ராஜேந்திர சிங் தாமி கூறுகையில், வீல்சேர் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, எனது கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு எனக்கு வேலை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அம்மாவட்ட கலெக்டர் விஜய் குமார் தெரிவிக்கையில், அவரது பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு அரசு திட்டங்களின் கீழ் உடனடியாக நிதி உதவி வழங்கும்படி மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறினார்.