- வீடு›
- செய்திகள்›
- கொரோனாவால் உயிரிழந்த தலைவரின் உடலை திரும்பித்தரக்கோரி 6 பேரை கடத்திய அமேசான் பழங்குடிகள்
கொரோனாவால் உயிரிழந்த தலைவரின் உடலை திரும்பித்தரக்கோரி 6 பேரை கடத்திய அமேசான் பழங்குடிகள்
By: Karunakaran Mon, 06 July 2020 09:26:52 AM
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் நாடு, பெரு, பிரேசில் நாடுகள் அருகே அமைந்துள்ளது. இந்நாட்டை சுற்றி அமேசான் காடு அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வாழ்வியல் அமைப்புகளை கொண்ட அமேசான் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அமேசான் பகுதிகளிலும் தற்போது தீவிரமடைந்துள்ளது.
பிரேசில், ஈக்வடார் போன்ற நாடுகளில் வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்குள்ள பழங்குடியின மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஈக்வடார் நாட்டின் குமே என்ற பகுதியில் வசித்து வரும் அமேசான் பழங்குடியின மக்களின் தலைவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த தலைவரின் உடலை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அமேசான் பழங்குடியினர் கோரிக்கை விடுத்தும், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபரை கொரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்யும் நடைமுறைப்படி அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், ஆத்திரமடைந்த அப்பழங்குடியினர் ஈக்வடார் நாட்டை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள், 2 போலீசார், 2 பொதுமக்கள் என 6 பேரை பிணைக்கைதிகளாக கடத்தி சென்றனர். அதன்பின், அதிகாரிகள் தரப்பில் இருந்து பழங்குடியின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, புதைக்கப்பட்ட பழங்குடியின தலைவரின் உடலை தோண்டி எடுத்து அம்மக்களிடம் ஒப்படைத்தனர். அதன்பின் கடத்தப்பட்ட 6 பிணைக்கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.