கொரோனா நிலவரம் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை
By: Monisha Mon, 15 June 2020 4:52:28 PM
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,33,008 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது. அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தலைநகர் டெல்லியும் ஒன்றாகும்.
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 41 ஆயிரத்து 182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1327 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஜூலை இறுதிக்குள் ஐந்து லட்சத்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதனால், 80 ஆயிரம் படுக்கைகள் கூடுதலாக தேவைப்படும். இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை, வைரசுக்கு எதிரான போராட்டம், அடுத்தகட்ட நடவடிக்கைகள், பரிசோதனைகளை அதிரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கட்சி தலைவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.