ஐதராபாத் மாநகராட்சி தேர்தலையொட்டி அமித்ஷா வாகன பேரணி
By: Karunakaran Mon, 30 Nov 2020 10:11:19 AM
தெலுங்கானா மாநிலத்தில் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்தி பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்நிலையில் தலைநகரான ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதனால் பா.ஜனதா முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது.
நேற்று தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாள் ஆகும். இதனால் பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஐதராபாத்துக்கு வந்தார். பழைய ஐதராபாத்தில் உள்ள பாக்யலட்சுமி தேவி கோவிலில் வழிபட்டார். அதன்பின், செகந்திராபாத் நகரில் வாகன பேரணியாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்துக்கு இடையே அமித்ஷா பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் 4 தொகுதிகளில் பா.ஜனதாவை மக்கள் வெற்றி பெற வைத்தனர். அதை வைத்து பார்க்கும்போது, மாற்றத்துக்கான தொடக்கம் ஆரம்பித்து விட்டது. ஐதராபாத் மாநகராட்சி தேர்தல், அடுத்த களம் ஆகும். ஐதராபாத் மக்கள் நல்ல நிர்வாகத்தை விரும்புகின்றனர். மோடி தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறினார்.
மேலும் அவர், இங்கு வந்திருக்கும் மக்கள் கூட்டத்தை வைத்து பார்க்கும்போது, ஐதராபாத் மேயர் பதவியில் பா.ஜனதா வேட்பாளர் அமர்வது உறுதி என்று தோன்றுகிறது. ஐதராபாத் மக்கள், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மீதும், ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மீதும் கோபத்தில் உள்ளனர். அதனால், மேயர் பதவிக்கு பா.ஜனதாவை தேர்ந்தெடுப்பார்கள். பா.ஜனதாவுக்கு வாய்ப்பு அளித்தால், ஐதராபாத், உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றப்படும். நவீன நகரமாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.