அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களில் ஏலம் விட நடவடிக்கை
By: Nagaraj Sat, 08 Aug 2020 08:12:30 AM
இன்னும் 3 நாட்களில் ஏலம்... சென்னை மணலியில் உள்ள 740 டன்கள் அம்மோனியம் நைட்ரேட்டை இன்னும் 3 நாள்களில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுங்கத் துறை உறுதியளித்துள்ளது.
சென்னை மணலியில் உள்ள சரக்குப் பெட்டக மையத்தில் 740 டன்கள் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 5 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சரக்குப் பெட்டக மையத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் மலையாண்டி தலைமையில் 3 அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
இது தொடா்பாக சுங்கத் துறை அளித்த அறிக்கையில் அம்மோனியம் நைட்ரேட் கிடங்கு
இருக்கும் பகுதியிலிருந்து 2 கி.மீ. சுற்றளவில் குடியிருப்புகள் இல்லை
என்று தெரிவித்திருந்தது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அரசுக்கு
அளித்துள்ள அறிக்கையின்படி, அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருக்கும்
இடமானது பல ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளா்களின் கண்டெய்னா்களை வைக்கும்
கிடங்காகும்.
இந்தக் கிடங்கிலிருந்து 700 மீட்டா் தொலைவில் உள்ள
மணலி டவுனில் 7,000 பேரும், சடையான்குப்பத்தில் 5,000 பேரும் என மொத்தமாக
12,000 போ வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிடங்கு 18 ஏக்கா்
பரப்பளவுடையதாகும். 2001-ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டில் உள்ள இந்தக்
கிடங்கு நரசிம்மன் என்பவருக்குச் சொந்தமானது. தற்போது சுங்கத் துறை
கட்டுப்பாட்டில் இந்த அம்மோனியம் நைட்ரேட் 2015-ஆம் ஆண்டு செப்டம்பா்
27-ஆம் தேதியிலிருந்து இந்தக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த
கிடங்கில் மொத்தம் 37 கண்டெய்னா்களில் ஒரு கண்டெய்னருக்கு 20 டன் வீதம் 740
டன்கள் அம்மோனியம் நைட்ரேட் படிக நிலையில் 25 கிலோ கிராம்
பாலிபுரொப்பீலின் பைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மோனியம்
நைட்ரேட்டை தேவைப்படுவோருக்கு வழங்குவதற்கான ஏல அறிவிப்பு ஏற்கெனவே
விடப்பட்டுள்ளதாகவும், இன்னும் 3 நாள்களில் ஏல நடவடிக்கை முடிந்து
இடமாற்றம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சுங்கத்
துறை அதிகாரிகள் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் உறுதி அளித்தனா்.
இதையடுத்து,
'சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட் அனைத்தையும் உடனடியாக
சுங்கத் துறை இடமாற்றம் செய்யவேண்டும். தொழிலகப் பாதுகாப்பு மற்றும்
சுகாதார இயக்குநா், கண்டெய்னா் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நேரடியாக ஆய்வு
செய்து உற்பத்தியாளா் சேமிப்பு மற்றும் அபாயகரமான வேதிப்பொருள் இறக்குமதி
விதிகள் 1989-இன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மோனியம்
நைட்ரேட் இருக்கும் கண்டெய்னா்களின் இருப்பிடத்தில், அவை இடமாற்றம்
செய்யப்படும் வரை உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும், அதற்காக
பணியாளா்களையும் நியமிக்க வேண்டும்' என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு
வாரியம் உத்தரவிட்டுள்ளது.