- வீடு›
- செய்திகள்›
- சென்னையிலிருந்து அம்மோனியம் நைட்ரேட் ஓரிரு நாளில் பாதுகாப்பாக அகற்றப்படும்; வெடிப்பொருள் துறை அதிகாரி தகவல்
சென்னையிலிருந்து அம்மோனியம் நைட்ரேட் ஓரிரு நாளில் பாதுகாப்பாக அகற்றப்படும்; வெடிப்பொருள் துறை அதிகாரி தகவல்
By: Monisha Tue, 11 Aug 2020 09:57:00 AM
கடந்த சில தினங்களுக்கு முன் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் சேமிப்பு கிடங்கில் டன் கணக்கில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்து அந்த நகரத்தையே உருக்குலைத்ததோடு, பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
இந்நிலையில் லெபனான் வெடிவிபத்து எதிரொலியாக, சென்னை மணலியில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கில் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் அம்மோனியம் நைட்ரேட் விரைவில் அப்புறப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வெடிப்பொருள் துறையின் துணை முதன்மை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன் கூறியதாவது:- சென்னை மணலி கிடங்கில் இருந்து மேலும் 240 டன் அம்மோனியம் நைட்ரேட் அகற்றப்பட்டுள்ளது. 240 டன் அம்மோனியம் நைட்ரேட்டுடன் ஐதராபாத்துக்கு 12 கண்டெய்னர்கள் புறப்பட்டன.
ஏற்கனவே 9ந்தேதி 10 கண்டெய்னர்களில் 181.70 டன் அம்மோனியம் நைட்ரேட் கொண்டு செல்லப்பட்டது. 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டில் எஞ்சியவற்றை 3வது மற்றும் இறுதி கட்டமாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள அம்மோனியம் நைட்ரேட் 15 கண்டெய்னர்களில் ஓரிரு நாளில் சென்னையிலிருந்து பாதுகாப்பாக அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.