- வீடு›
- செய்திகள்›
- ஆன்லைன் சூதாட்டம் .. இனியும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் .. அன்புமணி
ஆன்லைன் சூதாட்டம் .. இனியும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் .. அன்புமணி
By: vaithegi Sun, 26 Mar 2023 3:50:19 PM
சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , "திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரவிச்சந்திரன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட ரூ.7 லட்சம் கடனை அவரது தாயார் அடைத்துள்ளார். அதன்பிறகும் ஆன்லைன் சூதாட்ட மோகத்திலிருந்து மீள முடியாத ரவிச்சந்திரன் மேலும் பல லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் எவ்வாறு அதற்கு அடிமையான ஒருவரை கடனாளியாக்கி, தற்கொலை செய்துகொள்ளும் வரை விடாது என்பதற்கு ரவிச்சந்திரனின் வாழ்க்கை தான் சான்று. அதனால் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 48-ஆவது தற்கொலை இது. திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த 19-ஆவது தற்கொலை. புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த முதல் தற்கொலை. இது தொடர்கதையாகிவிடக்கூடாது.
எனவே ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதை ஆளுநர் உணர வேண்டும். எனவே, இனியும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.