பழங்கால ஆபரணம் லண்டன் அருகே கண்டுபிடிப்பு
By: Nagaraj Sun, 11 Dec 2022 11:56:57 AM
பிரிட்டன்: பிரித்தானியாவின் லண்டனுக்கு வடக்கே 60 மைல் தொலைவில் பழங்கால ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 1300 ஆண்டுகளுக்கு
முந்தைய பழமையான தங்கம் மற்றும் ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணம் ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதையலுக்கு ஹார்போல் புதையல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
10 வார கால அகழ்வாராய்ச்சியின் இறுதி நாட்களில், தொல்பொருள் ஆராய்ச்சி தளத்தின் தள மேற்பார்வையாளர் லெவென்டே-பென்ஸ் பலாஸ் புதைப்படிமங்களில் ஏதோ மின்னுவதை கவனித்துள்ளார்.
பின்பு அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதில் பிரித்தானியாவின் 7ம் நூற்றாண்டை சேர்ந்த ஆரம்பகால கிறிஸ்தவ மதத் தலைவராக இருந்த சக்தி வாய்ந்த பெண்ணின் கல்லறை கண்டெடுக்கப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கல்லறையில் பெண்ணின் சில பற்கள் மட்டுமே எஞ்சி இருந்தது, ஆனால்
நீண்ட காலமாக புதைப்பட்டு இருக்கும் இந்த கல்லறை, 7ம் நூற்றாண்டில்
பிரித்தானிய வாழ்க்கையில் புதிய தகவல்களை வெளிப்படுத்தும் என அறிஞர்கள்
தெரிவிக்கின்றனர்.
இந்த கல்லறையுடன் தங்க
ரோமானிய நாணயங்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட பதக்கங்கள் மற்றும் விலை
உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நீள்வட்ட நெக்லஸின் மையப்பகுதி ஒன்றும்
கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கார்னெட்டுகளால் பதிக்கப்பட்ட ஒரு
செவ்வக வடிவ தங்க பதக்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த
கலைப்பொருட்கள் 1,300 ஆண்டுகளுக்கும் மேலாக பகல் வெளிச்சத்தைக் காணவில்லை
என்று தள மேற்பார்வையாளர் லெவென்டே-பென்ஸ் பலாஸ் தெரிவித்துள்ளார்.
ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொல் பொருட்கள் பணிகள்
முடிந்தவுடன் உள்ளூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் வரலாற்றின் போக்கு
சிறிதளவு அசைக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.