22 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா திரும்பும் பழங்கால நடராஜர் சிலை
By: Nagaraj Thu, 30 July 2020 6:33:12 PM
லண்டனிருந்து மீட்பு... ராஜஸ்தானிலிருந்து திருடப்பட்ட 9 - வது நூற்றாண்டை சேர்ந்த பழங்கால நடராஜர் சிலை லண்டனிலிருந்து இந்தியா கொண்டு வரப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் மாவட்டத்தின் பரோலி கிராமத்தில் உள்ள காடேஷ்வரர் கோயிலில் கல்லினால் செதுக்கப்பட்ட 4 அடி உயர நடராஜர் சிலை இருந்தது. 9- ம் நூற்றாண்டின் பிரதிகரா கலையம்சத்துடன் நடராஜரின் காலடியில் நந்தி இருப்பது போல இந்த சிலை வடிவமைப்பப்பட்டுள்ளது. 1988- ம் ஆண்டு இந்த சிலையை போல மாதிரி ஒன்றை கோயிலில் வைத்து விட்டு மூலவர் சிலை கடத்தப்பட்டது.
பிரபல சிலை கடத்தல் கும்பல் தலைவனான வாமன் கியா இந்த சிலையை கடத்தியதாக சொல்லப்படுகிறது. பிறகு, இந்த சிலை சர்வதேச சிலை ஏல நிறுவனமான சோதேபை அமைப்பிடம் சிலை கடத்தும் கும்பல் விற்றுள்ளது. கடந்த 2003- ம் ஆண்டு இந்த சிலை லண்டனை சேர்ந்த சிலை சேகரிப்பாளர் காசிம் என்பவரிடத்தில் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து பிரிட்டன் அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் தகவல்
தெரிவித்தனர். தொடர்ந்து 2005- ம் ஆண்டு இந்த சிலை இந்திய தூதரகத்திடம்
ஒப்படைக்கப்பட்டது. இந்திய தூதரகம் செயல்படும் லண்டனிலுள்ள இந்தியா ஹவுஸில்
வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2017- ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை
அதிகாரிகள் லண்டன் சென்று சிலை ஆய்வு செய்தனர். அதில், ராஜஸ்தானிலிருந்து
திருடப்பட்ட நடராஜர் சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது, 22
ஆண்டுகளுக்கு பிறகு இந்த சிலை மீண்டும் இந்தியா கொண்டு வரப்படுகிறது.