பொங்கி எழுந்த மக்கள் ..போராட்டம் நீடிக்கிறது..மூடப்பட்ட பிரதமர் அலுவலகம்..
By: Monisha Thu, 07 July 2022 8:27:19 PM
இலங்கை: இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளதால் அங்கு பிரதமர் அலுவலகம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.கிட்டதட்ட கடந்த ஐந்து மாதங்களாக இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் விளைவாக உணவுப் பொருட்கள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அங்கு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
அத்துடன் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, பொருளாதார சிக்கல் குறைந்தபாடில்லை.
இதன் விளைவாக, புதிய அரசு பொறுப்பேற்ற பின் சில மாதங்கள் பொறுமை காத்து வந்த இலங்கை மக்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாவிட்டால் பதவியை விட்டு விலகுமாறு ரணில் விக்மரசிங்கே வீட்டு முன்பு மக்கள் போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர். இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, இலங்கை பிரதமர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
முன்னதாக, பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக வெடித்த மக்கள் போராட்டத்தின் விளைவாக, பிரதமராக பதவி வகித்து வந்த மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.