விமான நிலையத்தை பரபரப்பாக வைத்திருப்பது ஆபத்து - அனில் தேஷ்முக்
By: Monisha Mon, 25 May 2020 10:51:35 AM
நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்ட முதல் உள்நாட்டு விமான சேவை இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவித்தார். அதன் படி, உள்நாட்டு விமான சேவை இன்று காலை முதல் துவங்கியது. ஆனால் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் ஊரடங்கு முடியும் வரை விமான போக்குவரத்தை அனுமதிக்க முடியாது என மாநில அரசு தெரிவித்து இருந்தது.
இது தொடர்பாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியதாவது:- சிவப்பு மண்டலத்தில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பது மிகவும் தவறான யோசனை. விமான நிலையங்களில் உடல் வெப்ப பரிசோதனை செய்தால் மட்டும் போதுமானதாக இருக்காது. தற்போதைய சூழ்நிலையில் ஆட்டோக்கள், டாக்சிகள், பஸ்கள் இயக்குவது என்பது சாத்தியமற்றது.
பசுமை மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலத்திற்கு வரும் பயணிகளுக்கு அது ஆபத்தை ஏற்படுத்தி விடும். அதுபோல சிவப்பு மண்டல பகுதிக்குள்ளும் கொரோனா நோய் தாக்கத்தை அதிகரிக்கும். விமான நிலையத்தை பரபரப்பாக வைத்திருப்பது என்பது ஆபத்தானது தான். இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டில் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை விமான நிலையம் மற்றும் புனே விமான நிலையம் சிவப்பு மண்டலத்தின் கீழ் வருகிறது. அதன் அடிப்படையில் மந்திரி அனில் தேஷ்முக் இதனை கூறியுள்ளார்.